டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம்குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, மருத்துவர்கள் அடங்கிய பயங்கரவாத கும்பல் மற்றும் டெல்லி குண்டுவெடிப்பு பற்றி மத்திய உளவுத்துறையும் விசாரித்து முதற்கட்ட அறிக்கை அளித்துள்ளது. இந்நிலையில், என்ஐஏ விசாரணையில் சதி திட்டம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஏகே-47 துப்பாக்கி, பின்னர் இணை குற்றவாளியான அடிலின் லாக்கரில் இருந்து மீட்கப்பட்டது.
இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 2022ம் ஆண்டில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தெஹ்ரிக்-இ-தலிபான் உடன் தொடர்புடைய நபரின் அறிவுறுத்தலின் பேரில், முசம்மில், அடில் மற்றும் முசாபர் ஆகியோர் துருக்கிக்கு பயணம் செய்ததாகவும், அவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசல், ஹசிம் மற்றும் உகாஷா ஆகியோருடன் டெலிகிராம் மூலமாக தொடர்பில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















