அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ஆம் நாள் காலை உற்சவத்தில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில், இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, 16 கால் மண்டபம் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மற்றும் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் எழுந்தருளினர்.
பின்னர், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஒன்றன்பின் ஒன்றாக மாடவீதியில் வலம் வந்தனர். அப்போது, வழிநெடுகிலும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றிச் சிறப்பு வழிபாடு செய்தனர்.
















