சேலம் மாவட்டம் தலைவாசலில் பெய்த மழை காரணமாகத் தினசரி காய்கறி சந்தை சேறும் சகதியமாகக் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி சந்தையில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் விற்பனை எடுத்துச் செல்லப்படுகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தைக்குத் தலைவாசல் மட்டுமின்றி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆறகளூர் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். எப்படி பார்த்தாலும் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் தினந்தோறும் வந்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையின் அடிப்படை வசதிகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை.
ஒட்டுமொத்தமாக நான்கு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டும், பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதுவும் மழை காலம் ஆரம்பித்து விட்டால் போதும்…. மொத்த மார்க்கெட்டுமே சேறும் சகதியுமான மாறி அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இதனால், விளைபொருட்களை கொண்டு வரும் விவசாயிகளும், விற்பனைக்கு வரும் வியாபாரிகளும் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதும், இருசக்கர வாகனங்களில் தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதையாக இருக்கிறது. காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டின் தலையாய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் தலைவாசல் காய்கறி சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விற்பனைக்கான சூழ்நிலையை மேம்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
















