நீலகிரி மாவட்டத்தில் முதன் முறையாகக் கருப்பு நிற கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன கருப்பு நிற கேரட் சாகுபடி? பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவித் தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில்தான் கருப்பு நிற கேரட் சாகுபடிக்கான சோதனை முயற்சியில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை களமிறங்கியிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் பீகாரில் இருந்து கருப்பு நிற கேரட் விதைகள் பெறப்பட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவின் நாற்றங்காலில் தற்போது அவை விதைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கருப்பு நிற கேரட் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். கருப்பு நிற கேரட்டில் ஆன்த்தோசைலின் என்கிற திரவம் அதிகமாக உள்ளதால் மனிதர்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கருப்பு நிற கேரட்டில் விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்டவை அதிகமாக உள்ளதால் மனிதர்களுக்குப் பல நன்மைகளை தரக்கூடியது. இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்…. தற்போது சோதனை அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில விவசாயிகளுக்கும் கருப்பு நிற கேரட் விதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கருப்பு நிற கேரட் விதைகள் கிராமிய அபிவிருத்தி இயக்கம் மூலம் முதன்முறையாக நீலகிரி மாவட்ட விவசாயி சந்திரன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டு அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தே குன்னூர் சிம்ஸ் பூங்கா, நஞ்சநாடு தோட்டக்கலைத்துறை ஆகிய இடங்களில் சோதனை அடிப்படையில் இந்தக் கருப்பு நிற கேரட் பயிரிடப்பட்டுள்ளன.
இயற்கை முறையில் இந்தக் கருப்பு நிற கேரட் சாகுபடி செய்யும் சோதனை நடைபெற்று வருகிறது. கருப்பு நிற கேரட் இலைகளில் உள்ள எண்ணெய், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்தாக உள்ளது என்பதும் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு நாடுகள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை முறையில் பல காய்கறிகள் பயிரிடப்பட்டு வரும் நிலையில், மனிதர்களுக்குப் பல நன்மைகளைத் தரக்கூடிய இந்தக் கருப்பு நிற கேரட் சாகுபடியும் நடைபெறுகிறது. இந்தச் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் ஆரஞ்சு நிற கேரட் சாகுபடியுடன் கருப்பு நிற கேரட் சாகுபடியையும் இணைத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
















