டிட்வா புயல் எதிரொலியாகக் கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 15 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகக் கடலூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த 24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாகக் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களைச் சார்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஒரு வாரக் காலமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் சுமார் 15 கோடி ரூபாய் அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மீன் பிடி தொழில் சார்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
















