திருப்பரங்குன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கூறி, இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு நிறைவேற்றவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, இந்த விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், எனினும், உத்தரவுகளை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், சிஐஎஸ்எஃப் வீரர்கள் திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தார்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
















