சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு இரவு முழுவதும் தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததோடு அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
இது தொடர்பாக பேட்டியளித்த தூய்மை பணியாளர்கள் மண்டபத்தில் தங்களை அடைத்து வைத்த காவல்துறையினர் மின்விசிறிகளை அனைத்ததாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
தனியார் நிறுவனம் தங்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மனு அளிக்க சென்றாலே கைது செய்யப்படுகிறோம் எனவும் வேதனை தெரிவித்தனர்.
















