இந்தியாவில் 93 ஆண்டுகளில் முதல்முறையாகச் சாய் ஜாதவ் என்பவர் பெண் ராணுவ அதிகாரி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய ராணுவ அகாடமியில் 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதில் இருந்து பல ஆண்டுகளாக ஆண் அதிகாரி கேடட்கள் (Cadet) மட்டுமே பட்டம் பெற்றுள்ளனர். இதுவரை 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் அதிகாரிகளே பட்டம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கோலாப்பூரைச் சேர்ந்த சாய் ஜாதவ் என்ற 23 வயதான பெண், ராணுவ அகாடமியில் ஆண் கேடேட்டுகளுடன் சமமானத் தரநிலைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார்.
தனது பட்டப்படிப்புக்குப் பிறகு தேசிய அளவிலானத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலமே அவர் ராணுவ அகாடமியில் சேரும் வாய்ப்பைப் பெற்றார்.
டேராடூனில் உள்ள ராணுவ அகாடமியில் இருந்து வெளியேறி, லெப்டினன்ட் பதவியில் டெரிட்டோரியல் ஆர்மியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் ராணுவ அகாடமியில் இருந்து பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வெளியேறிய முதல் பெண் அதிகாரி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சாய் ஜாதவ்வின் கொள்ளுத் தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்திலும், தாத்தா இந்திய ராணுவத்திலும் பணியாற்றினர்.
அவரது தந்தை சந்தீப் ஜாதவ் இன்றும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















