வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்து, சுமார் 500 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க வைத்த, ஒரு அதிகாரியின் சாதனை இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்தன. 2016-ல் கடும் வறட்சி காரணமாக விவசாயி தற்கொலைச் செய்துகொண்ட சம்பவம், ஐஆர்எஸ் அதிகாரி உஜ்வல் குமாரின் மனசாட்சியை உலுக்கியது.
இதையடுத்து, மிஷன் 500 என்ற இயக்கத்தைதொடங்கி, வறட்சியின் பிடியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார்.
ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கிராம மக்களைச் சந்தித்து, வறண்டு கிடந்த ஏரி, குளங்களைத் தூர்வாரினால் மீண்டும் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
தொடக்கத்தில் தயங்கிய மக்கள், இவரது விடாமுயற்சியைக் கண்டு ஒன்றிணைந்தனர். அதன் பயனாக ஜல்கான் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும், ஏரி குளங்களில் சுமார் 500 கோடி லிட்டருக்கு அதிகமான மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
உஜ்ஜ்வல் குமார் சவ்ஹானின் முயற்சியால், விவசாயத்தை விட்டுச் சென்ற பல குடும்பங்கள் மீண்டும் நிலத்திற்குத் திரும்பி, பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
















