சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை என தெரிவித்துள்ளார்.
இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த மே மாதம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 கல்லூரிகளில், போதிய மருத்துவர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என தெரிவத்துள்ளார்.
மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தனது பங்குக்கு ஒரு விளம்பர நாடகத்தை அரங்கேற்றுவதோடு, தனது பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்டது, ஏழை எளிய பொதுமக்களே. உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவமனை வளாகம், போதிய மருத்துவர்கள், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















