சென்னை முகப்பேர் அருகே வீடு மற்றும் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான மணிவண்ணன், மணிமாறன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவர்கள் வீட்டின் மீது நள்ளிரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்த நாட்டுவெடிகுண்டுகளால் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலிமனையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கஞ்சா புகைப்பது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புகார் தெரிவித்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
















