பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது வழங்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஓமன் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஓமனில் இந்திய பள்ளிக்கல்வி முறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மஸ்கட்டில் உள்ள அல் பராகா அரண்மனைக்குப் பிரதமர் மோடி சென்றார். அவரை, சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையத், ஆரத்தழுவி வரவேற்றார்.
பின்னர், ஓமன் அரண்மனையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓமன் சுல்தான் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஓமன் வர்த்தக அமைச்சர் கைஸ் அல் யூசுப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓமனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 98 சதவீத பொருட்களுக்குச் சுங்க வரி நீக்கப்படும். இதனால் ஜவுளி, தோல் பொருட்கள், பொறியியல் சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவில் அதிகரிக்கும். மேலும், ஐடி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற 127 துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
இறுதியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, இதற்கு முன் ராணி எலிசபெத், ராணி மாக்சிமா, பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பு வாய்ந்த ஆர்டர் ஆஃப் ஓமன் விருதை பிரதமர் மோடிக்கு ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வழங்கிக் கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் பிரதமர் மோடியை வழியனுப்பினார். அனைத்து அதிகாரிகளுக்கும் கைக்கொடுத்து, சுல்தானை ஆரத்தழுவி பிரதமர் மோடி ஓமனில் இருந்து விடைபெற்றார்.
















