இந்துக்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், வங்கதேசத்துக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. பதிலுக்கு அந்நாடும் தங்கள் விசா சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதனால், இருநாடுகளுக்குமான உறவு மேலும் மோசமடைந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு ஐடா ஒதுக்கீட்டிற்கு எதிராக நடந்த மாணவர் போராட்டம், திடீரென முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குஎதிராகத் திரும்பியது. தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறை போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனா தஞ்சமடைந்தார். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதிலிருந்தே, இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. இவை வங்கதேசத்தின் உள்நாட்டு விஷயங்கள் என்றும், இந்தியா இதில்தலையிடக் கூடாது என்றும் முகமது யூனுஸ் கூறியிருந்தார்.
இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனை கைதியான ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்க தேச அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த போராட்டங்களுக்குத் தலைமை வகித்த இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுடன் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இரண்டு முக்கிய பத்திரிகை அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி, வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும், இந்திய துணைத் தூதரின் இல்லத்தின் மீதும் கல்வீசி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இதனையடுத்து இதையடுத்து வங்கதேச மக்களுக்கான விசா சேவைகள் காலவரையின்றி நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் டாக்காவில் உள்ள இந்திய தூதரகமும், சிட்டகாங் மற்றும் ராஜ்ஷாஹியில் உள்ள இரண்டு துணை தூதரகங்களும் இணைந்து வேறு எந்த இந்திய தூதரகத்தையும் விட அதிகமான இந்திய விசாக்களை வழங்கி வந்தன. இந்திய விசா பெறுவதற்காகச் சிட்டகாங், சில்ஹெட், ராஜ்ஷாஹி, குல்னா, மைமென்சிங், ரங்பூர், பாரிசல், ஜெஸ்ஸோர், தாகுர்கான், போகுரா, குமிலா, நோகாலி, பிரம்மன்பாரியா மற்றும் சத்கிரா ஆகிய பதினான்கு இடங்களில் ஒருங்கிணைந்த அதிநவீன இந்திய விசா விண்ணப்ப மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்கள் ஆண்டுக்குச் சுமார் 5,00,000க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை வழங்குகிறது.
இது இதுவரை உலகளவில் எந்த விசா வழங்கும் மையமும் செய்யாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா வந்த நேரத்தில் நோய்வாய்ப்படும் வங்கதேசத்தினர், இந்திய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்காகத் தங்கள் முதன்மை விசாக்களை மருத்துவ விசாக்களாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் இந்தியா கூறியிருந்தது. மேலும், அனைத்து விசாக்களும் வங்கதேசத்தவருக்கு இலவசமாகவே இந்தியா வழங்கி வந்தது.
இந்தியா கட்டணம் வசூலிக்கவில்லை என்றாலும், இந்தியர்களுக்கான விசாவுக்கு வங்கதேச அரசு கட்டணம் வசூலித்து வந்தது. முன்னதாக, வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிவந்த 25 வயதான தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞரை மத வன்முறையாளர்கள் அடித்து கொன்று தீவைத்து எரித்துள்ளனர்.
வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகத் தொடர்வன்முறை சம்பவங்கள் நடந்துவருவதைக் கண்டித்து, மேற்குவங்க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் பாஜகவின் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் கொல்கத்தாவில் கண்டனப் பேரணி நடந்துள்ளது. நிஜாம் அரண்மனையிலிருந்து பெக்பாகன் வரை நடந்த இந்தப் பேரணியில் பொதுமக்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்களைக் கைதி செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், அந்நாட்டில் வாழும் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட வேண்டும் என்றும் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டமும், டிசம்பர் 26 ஆம் தேதி தூதரக முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். சமீப காலமாக வங்கதேசத்தில் இயங்கிவரும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டாலும், புதிய ஜனநாயக அரசு அமைவதை விரும்பாத பாகிஸ்தான் முகமது யூனுஸ் உடன் சேர்ந்து இந்தியாவுக்குஎதிராகப் பெரியய சதியில் ஈடுபட்டு வருவதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
















