திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு எழுந்துள்ளது. நோயாளிகளை திமுக அரசு அலைக்கழித்து வஞ்சிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ மையங்கள் செயல்பட்டு வந்தன.
அங்கு மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்காகப் புறநோயாளிகள் பிரிவு, திருப்பூர் – தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது இங்குச் செயல்படும் சித்த மருத்துவமனையும், வேலம்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், சித்த மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டால், நோயாளிகள் அலைச்சலுக்கு ஆளாவார்கள் என்று கூறினர்.
பழைய பேருந்து நிலையம் அருகில் சித்த மருத்துவமனை இருப்பதால், நோயாளிகள் வந்து செல்வது எளிதாக இருப்பதாகக் கூறும் பொதுமக்கள், மருத்துவமனையை இடமாற்றினால் வயதானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர்.
மக்களுக்காகத் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறிய திமுக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மக்களை மட்டுமல்லாமல் வயதான நோயாளிகளையும் வஞ்சிக்கிறார் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நோயாளிகள் பலரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நிலையில், இங்குள்ள வருகை பதிவேட்டில், மருத்துவமனையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உருக்கமாக எழுதி வைத்துள்ளனர்.
சித்த மருத்துவமனையைச் செயல்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதும், வளர்ச்சியைக் காரணம் காட்டி மருத்துவமனையை இடம்மாற்றக் கூடாது என்பதுமே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
















