இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 4-வது டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி-20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பறக்க விட்ட அவர்கள், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களும், ஷஃபாலி வர்மா 79 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஹிமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியினர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அத்தபத்து 52 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் போட்டியை வென்ற இந்திய அணி தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
















