கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பாஜகவினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் லோகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், BJP என்ற எழுத்தில் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஈரோடு சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஒன்றுகூடி ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் அன்பை பரிமாறி கொண்டனர்.
இதேபோல் ராமேஸ்வரத்திலும் காவல்துறையினருடன் இணைந்து கேக் வெட்டி பட்டாசு வெடித்து மக்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
மதுரையில் வாண வேடிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் அவர்களுடன் காவல் துறையினரும் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் காவல்துறையினர் ஒன்றிணைந்து ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர். திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு முனை சந்திப்பில் திருக்கோவிலூர் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில், திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர்.
கோவை காரமடையில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் மக்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















