சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணிநியமனம் செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 2023ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 154 ஆசிரியர்களின் நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதியை பின்பற்றி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தகுதித் தேர்வு தேவை இல்லை என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வு தவறில்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து, சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரிய டெட் தேர்ச்சி பெறாதவர்களை பணிநியமனம் செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 316 பட்டதாரி ஆசிரியர்கள், 154 இடைநிலை ஆசிரியர்கள் என 470 ஆசிரியர்களின் கல்வித்தகுதியின் உண்மைத் தன்மைக்கு ஏற்ப பணி நியமனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித முறைகேடும் நடக்காமல் 154 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன அனுமதி வழங்கும்படி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
















