மெரினா கடற்கரையில், உணவுபொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்த கடைகளையும் அமைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த டிசம்பர் 22ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் எனவும், நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
உழைப்பாளர் சிலையின் பின்புறம் நிரந்தர கடைகளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை எனவும், சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைப்பதால், கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது எனவும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















