கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி
நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் இருந்து புறப்பட்ட சுவாமிகள், கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் என அழைக்கப்படும் ராஜ சபைக்கு கொண்டு வரப்பட்டன.
இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நடராஜ மூர்த்திக்கும் சிவகாம சுந்தரிக்கும் பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் மகாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடராஜர் பெருமானுக்கு ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது கோயில் வளாகத்தில் குவிந்திருந்த பக்தர்கள் சிவசிவா என கைகளை கூப்பி மனமுருகி வழிபட்டனர். மகா அபிஷேகத்தை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் குவிந்ததால் கோயில் வளாகம் நிரம்பி வழிந்தது.
இதேபோல் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி தியாகராஜ சுவாமி கோயில் மண்டபத்தில் அதிகாலை நடராஜர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை தொடர்ந்து, சப்பரத்தில் எழுந்தருளிய நடராஜர், கோயில் உட்பிரகாரத்தில் 3 முறை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர், நடராஜர் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வெளியேறும் தறுவாயில் கதவு அடைக்கப்பட்டு, மீண்டும் அவர் சன்னதி திரும்பும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ஆம் தேதி ஆருத்ரா தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் தாமிர சபையில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, பசு தீபாதாரனை நடைபெற்ற நிலையில், ஓதுவா மூர்த்திகள் திருவெம்பாவை பாடல்களைப் பாட நடராஜ பெருமானின் திருநடன காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவின் பகுதியில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ கோயில்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 25ஆம் தேதி திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் காலை 5.10 மணிக்கு நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. கைலாசநாதர் கோயிலில் மார்கழி திருவாதிரை முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்வு கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள சிவகுருநாதன் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது.
யாகங்கள் வளர்க்கப்பட்டு மேள தாளத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சந்தனம், வீபூதி, தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், நடராஜ பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















