உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான அந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து புகார் அளித்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.
இதனை கேட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இது மாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
புத்தக பதிப்பாளர் கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை மொத்தமாக பறிமுதல் செய்யவும் நீதிபதி ஆணையிட்டார்.
















