மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிறகு பிற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, முதன் முறையாக அலங்காநல்லூர் அருகே கீழக்கரை நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தனியார் அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 750 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, குக்கர் உள்ளிட்ட பரிசுகள் பொருட்கள் வழங்கப்பட்டன.
மதுரையில் தி ரைஸ் அமைப்பு சார்பில் உலக தொழிலதிபர் மாநாடு நடைபெறுவதால், ஜல்லிக்கட்டு போட்டியினை பார்பதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர்.
தமிழரின் பரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து ஒயிலாட்ட கலைஞர்களுடன் தொழிலதிபர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
















