அமெரிக்காவில் அரசு நிர்வாகம் நிதியின்றி முடங்கிய தருணத்தில், நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணத் திட்டம் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு என்ன நடந்தது?
அமெரிக்காவில் அரசு முடங்கிய தருணம், கடுமையான உறைநிலை, விமானங்கள் இல்லை.. இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் தொலைவுக்குக் காரில் பயணம் செய்திருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்…. அதுவும் மிகவும் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் என்றால் நம்ப முடிகிறதா… அப்படித்தான் நடந்ததாகக் கூறுகிறார் Supervisory Special Agent Gabriel Macias….2025ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று அவர் எழுதி வெளியிட்ட அந்தக் கட்டுரை,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நம்ப முடியாத பயண அனுபவத்தையும், பாதுகாப்பையும் விவரிக்கிறது… அமெரிக்காவில் டிரம்ப் அரசு நிர்வாகத்தில் பட்ஜெட் மசோதாக்கள் முறைப்படி நிறைவேறாததன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தடைபட்டது.. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அரசு நிர்வாகங்கள் முடங்கியிருந்த தருணம் அது…
நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்ற G7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகக் கனடாவில் இருந்த ஜெய்சங்கர், பின்னர் நியூயார்க் சென்றார். கடுமையான உறைபனி, ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்காத சூழலுக்கு மத்தியில் 670 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணிக்க வேண்டியதிருந்தது….
அவரைப் பத்திரமாக அழைத்துச் செல்ல “mission-defining challenge” என்ற திட்டம் வகுத்தது அமெரிக்கா… நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் ராஜதந்திர ரீதியிலான சந்திப்பு நடைபெற வேண்டிய சூழலில், கனடா எல்லையில் உள்ள லூயிஸ்டன்-குயின்ஸ்டன் பாலத்தில் ஜெய்சங்கரை வரவேற்ற அமெரிக்க அதிகாரிகள், மன்ஹாட்டனுக்கு ஏழு மணி நேர பயணத்தைத் தொடங்கினர். Diplomatic Security Service, New York Field Office, Buffalo Resident Office பாதுகாவலர்கள் இணைந்து துணிச்சலான செயல் திட்டத்தை உருவாக்கினர்.
ஜெய்சங்கர் கவச வாகனத்தில் அமர, ஓட்டுநர்கள் சுழற்சி முறையில் இயக்கினர். தடையற்ற, தொடர்ச்சியான பயணத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்… 670 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தப் பாதுகாப்பு நீடித்த நிலையில், இறுதியாக நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை கூறுகிறது…
2025 அக்டோபர் 1 முதல் நவம்பர் 13 வரை சுமார் 43 நாட்கள் அங்கு நீடித்த அரசு முடக்கத்திற்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயண திட்டம் மிகவும் சாதுர்யமாக, தைரியமாகத் திட்டமிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகிறது..
இது மிகவும் சவாலான பணியாகக் கருதப்பட்டாலும், ஸ்பெஷல் ஏஜெண்டின் கட்டுரைக்கோ, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைக் இந்திய தரப்பு எதிர்வினையாற்றவில்லை. அதனை உறுதிபடுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















