தமிழகத்தில் கர்நாடக பக்தர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி.விஜயேந்திர பிரதாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து வருகை தந்திருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனம் மீது லாரி லேசாக மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கர்நாடகா கொடி பொருத்திய வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும்போது தமிழர்கள் பிரச்னை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் சிலர் வதந்தி பரப்பி வருவதாக தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிரதாரி, சம்பவம் நடைபெற்ற நாளில் கர்நாடக பக்தர்கள் விரைவாக செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே பிரச்னையை சுமூகமாக தீர்த்து அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
மேலும், சிறிய விபத்தை இரு மாநில மக்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுத்தும் விதமாக சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















