ஜன நாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியத்தின் தரப்பில், ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய கால அவகாசம் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை அணுகியதாகவும், மறுதணிக்கை செய்ய கூடுதலாக 20 நாள்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதன் பின்பும், சான்றிதழ் கொடுக்க தங்கள் தரப்பில் தாமதமானால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம் எனவும்,
வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் திரைப்படம் வெளியாகியிருக்கும் எனவும் தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர், மறுதணிக்கை குறித்து தணிக்கை வாரியம் தங்களை முறையாக அணுகவில்லை எனவும், டிசம்பர் 29ஆம் தேதிக்குப் பின் அனைத்தும் தங்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டதாகவும், தணிக்கை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாகவே கருத வேண்டும் எனவும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
















