ரஷ்யாவில் பழுதான விமானத்தை அவசரமாக வயலில் தரையிறக்கி 167 பேரின் உயிரை காத்த விமானியிடம், 13 லட்சம் அமெரிக்க டாலர் நஷ்டஈடு கேட்டு விமான நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டெம்பரில் ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் A320 விமானம், ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவானில் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் விமானத்தின் கேப்டன் செர்கே பெலோவ் அவசர முடிவெடுத்து ஒரு விவசாய நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.

மாற்று விமான நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு எரிபொருள் அதிகமாக செலவான நிலையில்கூட, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 167 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பின் விமானத்தின் கேப்டன் செர்கே ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்டாலும், சில காலத்திற்கு பின் அவர் உட்பட அனைத்து பணியாளர்களும் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது விமான சேதத்திற்கான பொறுப்பை கேப்டன் செர்கே பெலோவ் மீது சுமத்தியுள்ள விமான நிர்வாகம், 13 லட்சம் அமெரிக்க டாலரை நஷ்டஈடாக வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை எதிர்த்து செர்கே தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், விமான சேதத்தின் மதிப்பீடு முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கணக்குகள் சரியான ஆவண ஆதாரங்களின்றி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
















