பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. அமீரக அதிபர் அண்மையில் இந்தியாவிற்கு வந்து மோடியை சந்தித்து பேசிய அடுத்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவிகளை குறைத்து வருகின்றன. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளுடனும், பிற இஸ்லாமிய தேசங்களுடனும் வர்த்தக மற்றும் ராணுவ உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, அந்த இரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினாலும், மற்ற நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும். அதேபோல, லிபியாவுடனும் பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டது. எல்என்ஜி சரக்குகளை வாங்குவது தொடர்பாக கத்தாருடனும் பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அந்த வரிசையில், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பல தசாப்தங்களாகவே பாகிஸ்தானின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும், அந்நியச் செலாவணியின் ஆதாரமாகவும் ஐக்கிய அரபு அமீரகம் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வேலை சார்ந்தும், சுற்றுலாவுக்காகவும் அமீரகத்திற்கு பயணித்து வருகின்றனர்.
இந்த சூழலில், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையத்தை நிர்வகிக்க ஐக்கிய அரசு அமீரகம் அண்மையில் முன்வந்திருந்தது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறையில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சவாலான சூழலில் விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவம் UAE-க்கு உண்டு. எனவே, அந்நாட்டுடனான ஒப்பந்தத்தால் பாகிஸ்தானின் விமான போக்குவரத்து புதிய உயரத்தை எட்டும் நிலை நிலவியது.
இந்த சூழலில்தான், கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
வெறும் 3 மணிநேரம் மட்டுமே டெல்லியில் இந்த அவர், மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில நாட்களில், இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது.
இதனை, பாகிஸ்தானின் The Express Tribune செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணைவதில் அமீரகத்திற்கு விருப்பம் இல்லை எனவும், அதனால் அடுத்தக்கட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான உறவை அமீரகம் விரும்பாததால்தான், ஒப்பந்தத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அமீரக அதிபர் வெறும் 3 மணிநேரம் இந்தியா வந்ததற்கே, பாகிஸ்தானின் முக்கிய ஒப்பந்தம் கைவிட்டு போய்விட்டது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 3 நாள் பயணமாக தற்போது இந்தியா வந்துள்ளனர். இதனால், பாகிஸ்தான் வேறு என்ன இழப்பை சந்திக்க போகிறது என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிய வரும்.
















