ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் தள்ளிப்போனது. உடனே ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், படத்தில் ராணுவ சின்னங்கள் மற்றும் மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் வந்துள்ளதால் மறு ஆய்வுக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பதில் மனுதாக்கல் செய்ய சென்சார் போர்டுக்கு போதிய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டனர். மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவுக்கு எதிரான வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுதாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
















