குடியரசு தினத்தையொட்டி சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர்.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அந்த வகையில், 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில், பாரம்பரிய தேநீர் விருந்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக சார்பில் அன்புமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதியநீதி கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள், நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தேநீர் விருந்தில், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

அதேபோல், கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இதனையடுத்து, தேநீர் விருந்து முடிந்ததும், எல்.கே.சுதீஷ் மற்றும் நயினார் நாகேந்திரன் சந்தித்து, சுமார் பத்து நிமிடத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர்.
















