மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனையோடும், நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அயராத உழைப்போடும் உருவாக்கப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் சிறு நிறுவனங்கள், தொழில்துறையினர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மொத்த பட்ஜெட்டின் செலவினம், ₹53.5 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது நாட்டின் முதலீடு அளவை காட்டுகிறது. 2026-27 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவு ₹12.2 லட்சம் கோடி என்ற இதுவரையில்லாத அளவை எட்டியுள்ளது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் வளர்ச்சியை மேம்படுத்தி, புதிய சாலைகள், இரயில் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கூறியுள்ளார்.
அடுத்துவரும் 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி முதலீட்டில் ‘பயோஃபார்மா சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, இந்தியாவை ஒரு உலகளாவிய பயோஃபார்மா மையமாக மாற்றி, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
சிறு நிறுவனங்கள் வளர்ச்சி நிதியாக ₹10,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, நமது சிறு நிறுவனங்கள் தேசிய அளவிலும், உலக அளவிலும் முன்னணி நிறுவனங்களாக மேம்படவும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உத்வேகமாக நமது சிறு, குறு நிறுவனங்கள் செயல்படவும் உதவியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அமைக்கப்படும் அரிய வகை கனிம வழித்தடங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான முக்கிய கனிமங்கள் சார்ந்த சுரங்கப்பணிகள், பதப்படுத்துதல் மற்றும் உற்பத்திக்கு ஆதரவளிக்கும். மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ₹40,000 கோடியாக உயர்த்தப்படுவது, “Make In India” திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு ஒரு வலுவான உத்வேகத்தை அளிக்கும் எனறும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படவுள்ள 20 புதிய தேசிய நீர்வழிகள் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாட்டின் உட்கட்டமைப்பு நவீனமயமாவதை உறுதி செய்யும். சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-ஹைதராபாத் உட்பட ஏழு அதிவிரைவு ரயில் வழித்தடங்கள், நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களுக்கு இடையே பசுமை போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நமது பட்ஜெட்டில், தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் உட்பட நாட்டின் 15 தொல்லியல் இடங்களை கலாச்சார மையங்களாக மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் செழிப்பான நாகரிகத்தை உலகிற்கே நாம் பறைசாற்ற முடியும்.
இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தென்னை மேம்பாட்டுத் திட்டம், பழைய மரங்களைப் புத்துயிர் பெறச் செய்து, அதன் உற்பத்தியை அதிகரித்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தென்னை சாகுபடியை சார்ந்துள்ள சுமார் 1 கோடி தென்னை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும்.
நமது நாட்டின் முந்திரி மற்றும் கோகோவிற்கான பிரத்யேகத் திட்டங்கள் மூலம், ஏற்றுமதி மேம்படுவதோடு, 2030-க்குள் “இந்திய முந்திரி” மற்றும் “இந்திய கோகோ” ஆகியவற்றை உலகளாவிய பிராண்டுகளாக உருவாக்க முடியும் நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் வழங்கி, விஸ்தார் என்ற செயற்கை நுண்ணறிவு உதவியோடு வேளாண் ஆலோசனைகளை வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது பலமிக்க இளைஞர் சக்தியை மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நடவடிக்கையாக, 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC ஆய்வகங்கள் அமைப்பதன் மூலம், Content Creation குறித்த பாடங்களை அறிமுகப்படுத்தவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது நமது மாணவர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ‘SHE-மார்ட்ஸ்’ (SHE-Marts) திட்டமானது, பெண்களை சுயஉதவிக் குழுக்களிலிருந்து, சுயதொழில் செய்யும் தொழில்முனைவோராக முன்னேற்ற உதவும். கிராமப்புற பெண்களால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஊக்கமளிக்கும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கல்வி நிறுவனங்களுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாணவியர் விடுதி அமைக்கப்படுவது, நமது பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக உயர்தர தொழில்நுட்பக் கல்வி கற்க உதவியாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















