தொடர்ந்து 9-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பாண்டில் G.I.T.A. MODEL என்ற கருப்பொருளை மையமாக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…
ஒவ்வொரு ஆண்டும் நீண்ட தூர இலக்குகளை நிர்ணயித்து பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், 2026-27 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, G.I.T.A. MODEL என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெறுதற்கு, G.I.T.A. MODEL என்ற அம்சம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அது என்ன G.I.T.A. MODEL என்பதை ஆராய்ந்து பார்த்தால், வளர்ச்சி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தற்சார்பு நிலை என்ற தாரக மந்திரம் உள்ளே புதைந்திருக்கிறது.
இதில் வளர்ச்சி என்பதை எடுத்துக்கொண்டால், சிறந்த சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளது.
உட்கட்டமைப்புகளை பொறுத்தவரையில், தரமான சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி, நகர்புறங்களை மேம்படுத்தி, நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
டிஜிட்டல் வளர்ச்சி, புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தவே, G.I.T.A. MODEL-ல் டெக்னாலஜி என்ற வார்த்தை இடம்பிடித்திருக்கிறது
கடைசியாக உள்ளது தான் ஆத்மநிர்பார் பாரத், அதாவது தற்சார்பு இந்தியா…உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, இறக்குமதியை குறைத்து, நம் தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்வதற்கான இலக்கை முன் நிறுத்துகிறது.
இதையெல்லாம், இனி வரும் காலங்களில் தான் மத்திய அரசு செய்யப்போகிறதா? என்றால் இல்லை. ஜிஎஸ்டி வரி , தொழிலாளர் சட்டம் என ஏற்கனவே சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி, டிஜிட்டல் இந்தியா,மேக் இன் இந்தியா உள்ளிட்ட தலைசிறந்த திட்டங்களை செயல்படுத்தி, பிரதமரின கதி சக்தி போன்ற திட்டங்களால் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, அதன் பிரதிபலனுக்காக மட்டுமே காத்திருக்கிறது. அதற்கு வலுசேர்ப்பதாகவே தற்போதைய G.I.T.A. MODEL பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
















