திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு தை மாத பௌர்ணமி, முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருநாளுடன் இணைந்து வந்துள்ளது. மேலும், விடுமுறை தினம் என்பதாலும், தைப்பூச விசேஷ நாள் என்பதாலும் திருவண்ணாமலை நகரில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற முழக்கத்துடன், ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி வழிபட்டு,கிரிவலம் சென்றனர்.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் தரிசித்தபடி, முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பக்திப் பாடல்களைப் பாடியபடிகிரிவலம் சென்று வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து கிரிவலம் முடிந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அடைந்ததும், காத்திருந்த பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர்.
















