மணிப்பூர் மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டதன் மூலம், அவர் விரைவில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி மற்றும் கூகி பிரிவினர் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் பைரேன் சிங்ம, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக தார்மீக பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார். அதன் காரணமாக அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மணிப்பூரில் பதற்றம் தணிந்து மெல்ல அமைதியான சூழல் திரும்பி வருகிறது.
இதற்கிடையே, நேற்று டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 37 பாஜக எம்.எல்.ஏ-க்கள், 5 என்.பி.எஃப் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஒரு ஜே.டி.யூ எம்.எல்.ஏ ஆதரவுடன், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த யெம்நம் கெம்சந்த் சிங் எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் விரைவில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஓராண்டுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி முடிவுபெறவுள்ளது.
















