நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ஜெய்பாலாஜி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு சொந்தமாக கொடிக்குளம் கிராமத்தில் 2.26 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், தனது நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற உதவி செய்வதாக கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவரது ஆடிட்டரின் பெயரில் பொது அதிகாரப்பத்திரமாக மாற்றியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நில அபகரிப்பு தனது புகாரை லோக் ஆயுக்தா விசாரித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மனுவில் இருக்கும் சில தவறுகளை சரிசெய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
















