பாகிஸ்தானில் இருசக்கர வாகனங்களில் இரும்பு கம்பிகள் பொருத்தும் நிகழ்வு அதிகரித்து ட்ரெண்டாகி வருகிறது.
பாகிஸ்தானின் லாகூரில், பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் முன்பகுதியில் நீண்ட இரும்பு கம்பிகள் செங்குத்தாகப் பொருத்தும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது ஏதோ மேட் மேக்ஸ் பட பாணிப் போர் தந்திரமோ அல்லது ஒரு புதிய ஃபேஷனோ என்று குழப்பமடைந்தனர்.
ஆனால், இதன் பின்னணியில் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
லாகூரில் நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவில் பிளாஸ்டிக், கண்ணாடி துகள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாஞ்சா நூல்களையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
பட்டம் விடுபவர்களின் கைகளிலிருந்து அறுந்து விழும் இந்த மாஞ்சா நூல்கள், சாலைகளின் குறுக்கே தொங்கிக் கிடக்கின்றன. அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த நூல் கண்ணுக்குத் தெரியாததால், பல உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
உயிரைப் பாதுகாக்க இந்த “ஆண்டெனா” போன்ற இரும்பு கம்பிகளைப் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனத்தின் முன்பக்க ஹேண்டில்பார் அல்லது ஃபோர்க்கில் பொருத்தப்படும் இந்த கம்பி, மாஞ்சா நூல்களை தடுக்கும் வகையில் பொருத்தப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
















