மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெ.பி.நட்டா, மக்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவையில் விவாதிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு விவகாரத்தையும் நுணுக்கமாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் பக்குவமற்ற குழந்தை, அவையை முடக்கி வைக்க முடியாது என ஜெ.பி.நட்டா தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை முடக்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மக்களவை முடக்கப்பட்டால் உடனடியாக மாநிலங்களவையும் முடக்கப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார். கும்பல் கொலைகளை செய்தது காங்கிரஸ்தான் என அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் நடந்த டெய்லர் கொலை உள்ளிட்ட கடந்த கால சம்பவங்களை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜுன கார்கே கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
















