முதலமைச்சர் ஸ்டாலின் தந்தை, மறைந்த கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாக காத்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மருத்துவர்களை சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மருத்துவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின், தற்போது அரசு மருத்துவர்களின் குரலை திட்டமிட்டு மவுனப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்கள், இன்று தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாண்புமிகு நீதிமன்ற உத்தரவையும், தேசிய மருத்துவ அமைப்பின் அறிவுறுத்தலையும் கூட, திமுக அரசு ஒரு பொருட்டாக கருதவில்லை. அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய ஊதியப்பட்டை நான்கும் மறுக்கப்படுகிறது. DACP ஊதியமும் மறுக்கப்படுகிறது. பதிலாக, திமுக அரசு மருத்துவர்களைக் கைது செய்வது, பணியிட மாற்றம் செய்வது என, தண்டித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்திற்கு இன்னும் அரசு வேலை வழங்கவில்லை. போராட்ட களத்தில், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர், மணிக்குமார் அவர்கள் உடலுக்கு மலர் வளையம் வைத்ததோடு சரி. சுகாதாரத்துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் முடிந்து விட்டது என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதமே, தமிழக பாஜக சார்பில், அரசு மருத்துவர்களுக்காகக் குரல் கொடுத்தோம். மக்கள் நல்வாழ்வும், மருத்துவர்கள் நலமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஆனால், திமுக அரசு, தொடர்ந்து மருத்துவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் ஆரோக்கியம் இதில் அடங்கியிருக்கிறது என்பதைக் கூட, முதலமைச்சர் ஸ்டாலின் உணரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உடனடியாக, அரசாணை எண் 354 அமல்படுத்தப்பட வேண்டும். மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். மருத்துவர் மணிக்குமார் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று, அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















