வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக இருக்கிறது என வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எரிசக்தி இறக்குமதி தொடர்பான முடிவுகள், வணிக ரீதியான லாபங்கள் மற்றும் நாட்டின் நீண்ட கால தேவைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
எரிசக்தி துறையில் வர்த்தகம், முதலீடு ஆகிய இரண்டிலும், நம் நாட்டின் நீண்ட கால கூட்டாளியாக வெனிசுலா இருந்து வருகிறது என்றும், 2019-20 வரை, நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக வெனிசுலா இருந்தது எனவும் கூறினார்.
2008 முதல் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், வெனிசுலா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், சர்வதேச தடையால் இறக்குமதி நிறுத்தப்பட்டு வினியோகம் தடைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக இருக்கிறது எனவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
















