நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபாரதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ல் நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த 2015-2016ஆம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்த நிலையில்,
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் விஜய் கணக்கு காட்டிய அறிக்கையை அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்தனர்.
அதில், புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு, வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த அபராதம் செல்லும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















