ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாகக் கூறி, மது போதையில் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து திமுக நிர்வாகி அடாவடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மது போதையில் அத்துமீறி நுழைந்த திமுக நிர்வாகி குப்பன் என்பவர், அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்தும், மேஜை மீது காலை வைத்தும் அடாவடியில் ஈடுபட்டார்.
பத்திரப்பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தும், தனக்கான ஆவணங்களை தராமல் சார் பதிவாளர் இழுத்தடிப்பதாக கூச்சலிட்டார். அரைமணி நேரம் இருந்த அவரை அலுவலக பணியாளர்கள் இணைந்து வெளியேற்றினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், திமுக நிர்வாகியின் ஒப்புதல் வாக்குமூலம் அதனை உறுதிபடுத்தியுள்ளது.
















