மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் மலேசியா முக்கிய தூணாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆரத்தழுவி வரவேற்றார்.
பின்னர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோலாலம்பூரில் நடக்கும் இந்திய வம்சாவளியினருடனான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் பிரதமர் மோடி ஒரே காரில் பயணித்தனர்.
இதனிடையே கோலாலம்பூரில் பொம்மலாட்டம், பரதநாட்டியம், குச்சுப்புடி உள்ளிட்ட பல்வேறு இந்திய பாரம்பரிய கலாச்சார நடனங்களை ஆடி, பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். இந்திய வம்சாவளியினர் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.
















