மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல தனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக மலேசியா சென்ற பிரதமர் மோடி, கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சி அரங்கிற்கு சென்ற போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 800 கலைஞர்கள் நடத்திய பிரமாண்ட நடன கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் 2வது மிகப்பெரிய நாடு மலேசியாதான் என்றும், இந்தியா மற்றும் மலேசியா இடையேயான நட்புறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் கூறினார். எம்ஜிஆர் பாடல், இந்திய இசையும், திரைப்படங்களும் மலேசியாவில் மிகவும் பிரபலம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகவும் விரும்புவது ஒரு அற்புதமான விஷயம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி உலகின் பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழ் கலாசாரம் உலகளாவியது என்று கூறிய பிரதமர், தமிழ் இலக்கியம் என்றும் அழியா புகழ் கொண்டது என்றும் விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் தமிழர்கள் என்றும் மலேசியா போன்று தனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















