மனித வாழ்க்கையில் நிலம் என்பது ஒரு முக்கிய அங்கமாக மாறி இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதனையடுத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், 2000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கத் தமிழ் பாடல்கள் பெண்ணின் தனித்துவத்தையும், வலிமையையும் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளதாகவும், அந்தப் பழம்பெரும் இலக்கியங்கள் போற்றிய ‘புதுமைப் பெண்’ என்ற சொல்லிற்கு மிகச்சிறந்த அடையாளமாக அன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திகழ்வதாகவும் கூறினார்.
நிலம் என்பது வெறும் மண் அல்ல, அது மனிதனின் தேவைகளை வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிலமற்றவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த கிருஷ்ணம்மாளின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டார்.
















