உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் சூழலியல் பூங்கா அமைக்கும் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உதகையில் நீண்டகால பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரேஸ் கிளப்பில் பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழம் மட்டுமல்ல அண்டை மாநில மற்றும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருகை தருகின்றனர். அந்த வாகனங்களை பார்க்கிங் செய்ய போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் சாலைகளிலேயே நிறுத்தி வைப்பதும், அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் வரி செலுத்தாத காரணத்தினால் உதகை மையப்பகுதியில் அமைந்திருக்கும் குதிரைப் பந்தய மைதானத்தில், பார்க்கிங் அமைப்படுவதற்கு பதிலாக பூங்கா அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
உதகை நகரில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கர்நாடக அரசின் கர்நாடக பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ள நிலையில், உதகை நகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூங்காக்கள் உள்ளது. இத்தனை பூங்காக்கள் இருக்கும் போது மேலும் ஒரு பூங்கா தேவையற்றது எனவும், அந்த இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சுற்றுலாத் தளங்களில் சூழலியல் பூங்காக்கள் அவசியமான ஒன்று தான் என்றாலும் கூட, தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பார்க்கிங் அமைப்பதே சிறந்த முடிவாக அமையும் என்பதே உதகை பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
















