எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க அரசு மற்றும் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், குரூப் பி பிரிவு அதிகாரிகள் பெயரை மைக்ரோ அப்சர்வர்களாக பரிந்துரை செய்வதற்கு தாமதம் ஏற்படுத்தியது ஏன் எனவும், கடந்த 4ம் தேதி தாங்கள் உத்தரவு போட்ட நிலையில், 7ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு இமெயிலில் பெயர் பட்டியலை அனுப்பியது ஏன் எனவும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார்.
அப்போது, குரூப் பி பிரிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை என மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தேவையான அலுவலர்கள் தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு ஐந்து முறை கடிதம் எழுதியதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, தேவையான உத்தரவையோ அல்லது வழிமுறைகளை பிறப்பிப்போம் எனவும், ஆனால், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார். இதனை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
















