மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்திற்கு உட்பட்ட 4 கிராமங்களில் செயல்படும் கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு நிலவியது.
கல்லணை அச்சங்குளம், தூம்பகுளம் புதூர், நெடுங்குளம், உலகாணி ஊராட்சியில் செயல்படும் கல்குவாரிகள், அரசால் அனுமதிக்கப்படாத புறம்போக்கு பகுதிகளிலும் கற்களை வெட்டி எடுப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, சுமார் 100 நாட்களுக்கு மேலாக 4 கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மனு நீதி நாள் முகாமிற்கு வந்த கிராம மக்கள், திடீரென மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்வர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் கிராமத்தினர் விடுவிக்கப்பட்டனர்.
















