மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் புர்கா அணிந்து பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்த இளைஞரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மும்பையில் பட்டப்பகலில் புர்கா அணிந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கான ரயில் பெட்டியில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அவரது நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த பெண்கள், இளைஞர் ஒருவரே புர்கா அணிந்து ரயில் பெட்டியில் பயணிப்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து புர்கா அணிந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், வரவிருக்கும் ரயில் நிலையத்தில் அவரை போலீசிடம் ஒப்படைக்கப் போவதாக மிரட்டினர்.
இதனால் பயந்த புர்கா அணிந்த இளைஞர், ஓடும் ரயிலில் இருந்து குதித்து தண்டவாளத்தை கடந்து மற்றொரு ரயிலில் ஏறியுள்ளார்.
இதுகுறித்து பெண்கள் காட்கோபர் ரயில் நிலையத்தில் இறங்கி போலீசாரிடம் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் இளைஞரின் அடையாளம் தெரியவில்லை எனக் கையை விரித்துள்ளனர். இதனிடையே பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்த புர்கா அணிந்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
















