பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் பாஜக மாநில மகளிர் அணி தலைவர் கவிதா ஶ்ரீகாந்த் தலைமையில் ஆர்ப்பாடம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாக குற்றம் சாட்டினார்.
பின்னர் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, திமுகவின் குடும்ப பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு இருந்தால் போதுமா, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா என கேள்வி எழுப்பினர்.
இதேபோல் திருச்சியிலும் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
















