நைஜீரியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், என்ஜினின் மேல் பகுதி சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து போர்ட் ஹார்கோர்ட் பகுதியை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அரிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-7GL விமானத்தில் 80 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர்.
விமானம் 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, இடதுபுற என்ஜினில் இருந்து திடீரென பெரும் வெடிச்சத்தம் கேட்டது. விமானிகள் என்னவென்று ஆராய்ந்தபோது என்ஜினின் Cowling எனப்படும் மேலுறை முற்றிலும் சேதமடைந்திருந்தது.
என்ஜினில் இருந்த உலோகப் பொருட்கள் விமானத்தின் வால் பகுதியில் மோதியதால் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள், உடனடியாக விமானத்தை அருகில் உள்ள பெனின் சிட்டி பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.
இதனால், அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தின் என்ஜினில் எப்படி கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















