வடகொரியாவின் அடுத்த தலைவராக தனது 13 வயது மகளை கிம் ஜாங் உன் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
1948ம் ஆண்டு ஒருங்கிணைந்த கொரியாவில் இருந்து பிரிந்து வடகொரியா என்ற புதிய நாடு உருவானது. அந்நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற கிம் இல் சுங் (Kim Il Sung) என்பவர், 1972ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார். பின்னர் பிரதமர் பதவியை நீக்கிவிட்டு, தனக்கே தனக்காக அதிபர் என்ற புதிய பதவியை உருவாக்கினார். 1994ம் ஆண்டு உயிரிழக்கும் வரை, அவர் அந்த பதவியில் நீடித்தார்.
கிம் இல் சுங்கிற்கு பிறகு அவரது மகனான கிம் ஜொங் இல் (Kim Jong-il) ஆட்சிப்பொறுப்பேற்றார். இவர் அதிபர் என்ற பட்டத்தைப் பயன்படுத்தாமல், தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார்.
2011ம் ஆண்டு அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போதுள்ள கிம் ஜாங்-உன் வடகொரியாவின் அதிபராக பொறுப்பேற்றார். இன்று வரை அவர்தான் வடகொரியாவின் உச்சபட்ச தலைவராக இருந்து வருகிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 1948ம் ஆண்டில் இருந்து கிம் ஜாங் உன்னின் குடும்பம்தான் வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கிம் ஜாங் உன்னுக்கு பிறகாவது, அந்நாட்டில் குடும்ப ஆட்சி முடிவுக்கு வருமா என பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று.
கிம் ஜாங் உன் தனக்கு பிறகு, தனது மகளை அதிபராக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், வடகொரியாவின் எதிர்கால அதிபராக அறிவிக்கப்படவுள்ள கிம் ஜாங் உன்னின் மகளுக்கு தற்போது வெறும் 13 வயதுதான் ஆகிறது.
2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வடகொரியாவில் ஹ்வாசோங்-17 (Hwasong-17) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடைபெற்றது. அப்போது கிம் ஜாங் உன்னின் கைகளை பிடித்துக்கொண்டு, அவரது மகளான கிம் ஜூ-ஏ முதன்முறையாக பொதுவெளியில் தோன்றினார்.

கிம் ஜாங் உன்னின் மகள் முதல்முதலாக பங்கேற்றது ராணுவ நிகழ்வாக அமைந்தது தற்செயலானது அல்ல. 2022ம் ஆண்டு முதல் இன்று வரை கிம் ஜூ-ஏ, அரசு மற்றும் ராணுவ நிகழ்ச்சிகளில் 51 முறை பங்கேற்றுள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பங்கேற்றது உலகம் முழுவதும் கவனம் பெற்றது. அந்த நிகழ்விலும் கிம் ஜூ-ஏ கலந்துகொண்டிருந்தார்.
இப்படி, அரசு விழாக்களிலும், ராணுவ நிகழ்வுகளிலும், உலக தலைவர்கள் உடனான சந்திப்பிலும் பார்த்து பார்த்து தனது மகளை முன்னிலைப்படுத்தி வருகிறார் கிம் ஜாங் உன்.
இம்மாத இறுதியில் வடகொரியாவில் தொழிலாளர் கட்சியின் 9ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. அதில், பல முக்கிய அறிவிப்புகளை கிம் ஜாங் உன் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, தனது மகளை தனது அரசியல் வாரிசாக அவர் முன்மொழிவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் பல நாடுகளை போலவே, வடகொரியாவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட நாடாகும். எனவே, தனது மகளை அடுத்த வாரிசாக கிம் ஜாங் உன் அறிவிக்க மாட்டார் என்றுதான் தொடக்கத்தில் பலரும் கருதி வந்தனர். ஆனால், கிம் ஜாங் உன்னின் தற்போதைய செயல்பாடுகள் அந்த கருத்தை பொய்ப்பிப்பதாக உள்ளது.
கிம் ஜாங் உன் அரசியலில் காலடி வைத்தபோது அவருக்கு 26 வயதுதான் ஆகியிருந்தது. இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்ததால், அவரால் பலவற்றை முன்னதாகவே கற்றுக்கொள்ள முடிந்தது. அதே பாணியை தனது மகள் விவகாரத்திலும் அவர் கடைபிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
















