திருச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளர்.
திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது புளியஞ்சோலை பகுதி. அடர்ந்த காடுகள், இரைச்சலற்ற சூழல், தூய்மையான காற்று, குளிர்ச்சியான நீரோடை என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த இடம் அமைந்துள்ளது.
கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை அமைந்துள்ளதால், இங்குள்ள நீரூற்றுகள் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.மேலும், பல மூலிகை மரங்களையும், செடிகளையும் கடந்து தண்ணீர் வருவதால், அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இங்கு குளிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சோலைக்கு வருகை தருவது வழக்கம்.
குறிப்பாக கோடை காலங்களில் வெம்மையில் இருந்து தப்பவும், குளிர்ச்சியான தண்ணீரில் நீராடவும், உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பல அடிப்படை வசதிகள் இங்கு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, பெண்கள் உடை மாற்ற எந்த அறையும் இல்லை.
அதேபோல், புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் உரிய முறையில் செய்து தரப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதாக கூறும் அவர்கள், நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடைக்காலத்தில் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கு முன்பாகவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
















